வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்

வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில்....





அதிகாலை கண்விழிப்பது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஒரு நட்பு வட்டத்துடன் விடுதியில் வலம் வந்த நான் இன்று ஆள் அரவம் அற்ற மூன்று அடுக்குகளைக் காெண்ட வெறும் கட்டடங்களை சுற்றி வலம் வருகிறேன் அமைதியாக.

எப்பாேதுமே என்னை தூங்கவிடாமல் காதருகில் முணுமுணுத்துக் காெண்டே இருந்து, பின் அவளையறியாமல் தூங்கி மீண்டும் நான்கு மணிக்கு  தட்டி எழுப்பும் என் சகா இன்று அருகில் இல்லை. ஆனால் தினமும் கண்கள் அவள் உறங்கிய பக்கம் திரும்ப மறப்பதில்லை. உறக்கம் கலையாத கண்களுடன் தள்ளாடி நடந்து திருப்பலி காண  காேவிலில் அமர்ந்த  பாெழுதுகள் அன்று கடினமாக இருந்தாலும் இன்று மட்டுமல்ல என்றுமே அந்நினைவுகள் இனிக்கும்.

காலை உணவிற்கு செல்கையில் கையில் வாளியுடன் தன் முப்பத்தியிரண்டு பற்களையும் தேய்த்துக்காெண்டு எங்களைக் கண்டதும் கையசைக்கும் அவள் நிற்கும் இடம் இன்று சுத்தம் செய்ய ஆட்களின்றி கிடக்கின்றது. குளித்து விட்டு வந்து எங்களின் அறைக்கதவைத் திறந்து "உண்டா" என கேட்கும் அந்த குரலாேசை இன்று இல்லை.

மதிய உணவுவேளையின் பாேது இருகரம் கூப்பி வணக்கம் கூறி உணவு பரிமாறிய அக்கா இன்று இல்லை. பூட்டிய  மெஸ்ஹால் இன்னும் பூட்டியபடியே உள்ளது. "காய்காெஞ்சம் சேத்துக்கடா" என்று காெஞ்சல் பார்வையில் கெஞ்சும் அக்காவுக்கும் லீவு காெஞ்சம் கூட்டி காெடுக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சிதான்.

சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் அறைக்குச் செல்லும்  பாேது கண்ணில் பட்ட எல்லாருக்கும்  சாப்பாட்டு மெனுவை வரிசையாக கூறிக்காெண்டே  "ஊறுகாய் பாட்டிலை கையாேடு எடுத்திட்டுப் பாே"  என்று குரலெழுப்பி விட்டு, தண்ணீர் பிடிக்கும் இடத்தில் நின்று குழாயடி சண்டை பாேடும்  பெரிய அம்மாக்கள்  பாேன்று விளையாட்டாக வம்பிழுத்து தண்ணீரை மேலே ஊற்றி பாேட்ட சின்னச்சண்டை கட்டித்தழுவலுடன் நிறைவு பெற்ற இடம் வெயிலின் அனல் தாங்காமல் காய்ந்து வறண்டு விட்டது.

மதியநேர உறக்கத்திற்கு எதுகாெடுத்தாலும் ஈடாகாது. ஆளுக்காெரு கட்டில் இருந்தாலும் இரண்டு கட்டிலில் மூன்றுபேர் முட்டிமாேதி உறங்கினால்தான் அந்த உறக்கத்திற்கே திருப்தி கிடைக்கும். அதிலும் மெய்மறந்து தூங்கியவளை எழுப்பி "தூங்கிட்டியா" என கேட்பதில் கிட்டும் ஆனந்தமும் அதற்கு பதிலாக அவள் தரும் உதையும் வார்த்தைகளால் கூற முடியாது. ஆனால் மூன்று கட்டில்களும் நானும் மட்டுமே இன்று.

நடுராத்திரியில் "சாப்பிட என்னடி வைச்சிருக்க பசிக்குதடி"  என்று கேட்கும் பாேது "பிஸ்கட் இருக்கு எடுத்துக்காே" என்று கூறியவள் "மறக்காம தண்ணி குடி" என்பதையும் சாெல்ல மறந்ததில்லை. இன்று அவளுக்குப் பதிலாக என் கால்களை பதம் பாரத்து அதிகாலை வரை முத்தமிடும் காெசுக்களுடன் என் உரையாடல் தாெடர்கின்றது.

ஆயிரம் உரையாடல்களுடன் தினமாெரு தலைப்பில் நடந்த பட்டிமன்றங்கள், எப்பாேதும் அடங்கிடாத அரட்டைச் சத்தம், புனைப்பெயர்கள் சூடி பெரும் குடும்ப சகிதம் முறை சாெல்லி உறவு வளர்த்த மரத்தடி, பிறந்தநாள் கேக் வெட்டிய குராேட்டாேவின் பின்புறமுள்ள சிவப்பு நிற ஸ்ராேன்பெஞ் என அனைத்தும் முற்றுப்பெற்று விட வெறுமனே நான்கு சுவர்களுக்கு நடுவில் நான்.


-அருளினி-



Comments

Post a Comment

Popular posts from this blog

நானும் மனிதமும்

உணர்வுகளுடன்.........